சந்திரயான் - 2 நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்யும்: மயில்சாமி அண்ணாதுரை

நிலவில் பல இடங்களில் நீர் ஓடியதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சந்திரயான் - 2 நிலவில்

நிலவில் பல இடங்களில் நீர் ஓடியதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சந்திரயான் - 2 நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்யும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் குழுத் துணைத்  தலைவரும்,  விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சேலம் விமான நிலையத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி:-
சந்திரயான் மட்டுமே நிலவில் நீர் உள்ளதை துல்லியமாகக் கணித்துக் கூறியது. இதை நாசாவும் அண்மையில் அறிவித்தது. சந்திரயான்-1 கண்டுபிடித்த நீரையும், சந்திரயான்-2 கண்டுபிடிக்கும் தகவலும் அடுத்தக் கட்ட ஆராய்ச்சிக்கு உதவும். சந்திரயான் -2, நிலவில் இறங்கி ஆய்வு பணியைத் துவங்கும். 
மனிதர்களை நிலவில் இறக்குவதற்கான மிகப் பெரிய முயற்சி இதுவாகும்.  சந்திரயான்-1 நிலவில் நீர் இருப்பதை 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கண்டறிந்தது. ஆனால், சந்திரயான்-2 நிலவில் இறங்கி நீர் இருப்பதை உறுதி செய்யும். மேலும், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை விண்வெளி சென்றவர்கள் திரும்பி வரும்போது, அவர்கள் கடலில்தான் இறங்க முடிந்தது. ஆனால், தற்போது விண்வெளி சென்றவர்கள் ஓடுதளத்தில் இறங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
செவ்வாயில் மழை பெய்யலாம் என கூறியிருக்கிறோம். அங்கும் பருவக் காலங்களில் மேகக் கூட்டங்கள் கூடுகின்றன.
பல நாடுகள் செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பி இருந்தாலும் கூட சந்திரயான் மட்டுமே துல்லியமாக எங்கெங்கு நீர் உள்ளது என்பதைக் கண்டறிந்தது. தற்போது அதையும் தாண்டி நிலவில் சர்வதேச விண்கலம் அமைத்து நிலவில் அடுத்தகட்ட ஆய்வு மேற்கொள்ள முடியும் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com