ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க செவ்வாய்க்கிழமை பூமிபூஜை செய்யப்பட்டது.
ஆத்தூர் தேசிய புறவழிச் சாலை அமைத்து சுமார் 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் போதிய மின் வசதி இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு மின்விளக்கு அமைக்க வேண்டும், மேலும் பிரிவு சாலை குறியீடு தேவை என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மற்றும் ஆத்தூர் நகராட்சி சார்பில் ரூ.5லட்சம் கொண்டு உயர்மின் கோபுர விளக்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை ஆத்தூர் நகரச் செயலர் அ.மோகன் தலைமையில் நடைபெற்ற பூமிபூஜையில், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி கலந்துகொண்டு பணியை தொடக்கி வைத்தார்.
இதே போல் ஜோதிநகர் வரதராஜுலு தெருவில் சுமார் 30 ஆண்டுகளாக சாலையின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நகரச் செயலரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சாலையை புதுப்பிக்க பூமிபூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.