குடியிருப்புப் பகுதியில் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் பாதிப்பு
By DIN | Published On : 19th May 2019 07:41 AM | Last Updated : 19th May 2019 07:41 AM | அ+அ அ- |

ஓமலூர் அருகே குடியிருப்புப் பகுதியிலேயே குப்பைகளைக் கொட்டி எரிப்பதால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செம்மாண்டப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஊராட்சியில் பல இடங்களில் இருந்தும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சிப் பணியாளர்கள் செம்மாண்டப்பட்டி-பெரியப்பட்டி சாலையை ஓட்டி கொட்டுகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் ஏற்படும் புகையால், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த குப்பைகளை எரிப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், செம்மாண்டப்பட்டி பொது சுகாதார வளாகம் அங்கு அமைந்துள்ளதால், அவற்றை பெண்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, குடியிருப்புப் பகுதிகள் இல்லாத இடத்தில் குப்பைகளைக் கொண்டு சென்று கொட்டுமாறும், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.