ஓமலூர் சரபங்கா ஓடையை தூய்மைப்படுத்தும் இளைஞர் குழுவினர்
By DIN | Published On : 11th September 2019 10:02 AM | Last Updated : 11th September 2019 10:02 AM | அ+அ அ- |

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் நுழைவு வாயிலில் உள்ள சரபங்கா ஆற்று ஓடையில் இறைச்சிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதையடுத்து, ஓமலூர் இளம்தளிர் பசுமை இயக்க குழுவினர் அங்கு தூய்மை பணியை தொடங்கியுள்ளனர்.
ஓமலூர் நகரின் நுழைவு வாயிலான மேம்பாலத்தின் அடியில் சரபங்கா ஆற்று ஓடை உள்ளது. இந்த ஓடையில் தனியார் இறைச்சிக் கடைகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், கண்ணாடிகள், பிளாஸ்டிக் கழிவுகள்மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டுகின்றனர். மேலும், பல கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால், உயிருக்கு ஆபத்தான நச்சுப் புகை காற்றில் கலக்கிறது. இது மிக மோசமான துர்நாற்றத்தை அந்த பகுதியில் பரப்புகிறது. இதனால், நகருக்குள் நுழையும் அனைத்து மக்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மூக்கைப் பிடித்துக்கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஓமலூரில் உள்ள இளம்தளிர் பசுமை இயக்கக் குழுவினர் இந்த ஓடையை தூய்மைப் படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். அக் குழு இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தில் கொட்டப்பட்ட அனைத்து வகையிலான கழிவுகளையும் அகற்றினர். மேலும், குளத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றினர்.
மேலும், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூய்மை செய்வதற்காக அரசு அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். மேலும், ஓடையில் உள்ள மரங்களை அகற்றும் பணியை தொடர்ந்து செய்து வரும் அவர்கள், குப்பைகளை அகற்றி மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். இவர்களின் இந்தப் பணிக்கு அரசியல் கட்சிகளும், தனியார் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.