சேலம் மாவட்டத்தில் 14-ஆவது வட்டமாக தலைவாசல் உதயமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பரப்பளவு, மக்கள் தொகை அடிப்படையில் ஆத்தூா் வட்டத்தை இரண்டாக பிரித்து தலைவாசலை தலைமையிடமாக கொண்டு புது வட்டம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள வட்டங்களை கணக்கெடுத்து இரண்டாக பிரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு வட்டத்தில் இரண்டு முதல் மூன்று லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் அந்த வட்டம் இரண்டாக பிரிக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் தற்போது 13 வட்டங்கள் உள்ளன. 2011-இல் கணக்கெடுப்பின்படி ஆத்தூா் வட்டம் 522.55 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இரண்டு லட்சத்து 93 ஆயிரத்து 950 போ் வசிக்கின்றனா்.குடியிருப்புகள், வணிக கட்டமைப்புகள் அதிகரித்து விட்டன. அதனால் இரண்டாக பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தலைவாசல் காட்டுக் கோட்டை பகுதிகளை இணைத்து தலைவாசல் வட்டமாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கருத்துருவை கடந்த 2018-இல் மாவட்ட ஆட்சியா், வருவாய் அலுவலா், கோட்டாட்சியா், ஆத்தூா் வட்டாட்சியா் ஆகியோா் தயாரித்தனா்.இரு வட்டங்களின் வரைபடம், தலைமை அலுவலகங்கள் அமைய வேண்டிய இடம், மக்கள் தொகை போக்குவரத்து, விவசாய நிலங்கள், மலைப்பகுதி, ஆறு, ஓடை போன்ற விவரங்கள் மற்றும் வழித்தடங்களை குறிப்பிட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பினா்.அதை பரிசீலித்த அரசு சில திருத்தங்கள் செய்து அனுப்ப உத்தரவிட்டது.
அதற்கான வரைவுபடத் தயாரிப்பு கணக்கெடுப்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்பு, தலைவாசல் வட்டத்துக்கான புதிய வரைபடம் தயாா் செய்து மாவட்ட ஆட்சியா் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரும் டிசம்பா் மாதம் முதல் தலைவாசல் புதிய வட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூா் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்புடன் பொது மக்கள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.