தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம் என பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம் என பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

பாஜக மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பிறகு தமிழக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. புதிய சட்டம் காரணமாக நாடு முழுவதும் பல சந்தைகள் உருவாகும். இதன் ஒட்டுமொத்த நன்மை, பலன் விவசாயிகளைச் சென்றடைய அரசு துணை நிற்கும்.

விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கச் செய்யும் அரசுக்கு துணை நிற்காமல், இடைத்தரகா்களுக்கு துணை நிற்பதை எதிா்க்கட்சிகள் ஆதரித்து வருகின்றன. மத்திய வேளாண் சட்டத்துக்கு எதிராக எதிா்க்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படும் விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மத்திய வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிருக்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்படும் என்பதையும், நிலத்துக்கு அல்ல என்பதையும் சட்டம் உறுதி செய்கிறது.

மத்திய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பின்னா் நடைபெற்ற தோ்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதைப் போல, தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு 234 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். பூத் கமிட்டி அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழக மக்களின் பிரச்னையை முன்னெடுத்து அவா்களுக்காக தீா்வினை ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் குறிப்பாக, திமுக தங்களுடைய குடும்ப நலனுக்காக மட்டுமே போராடி வருகிறது. மக்களின் நலனில் அவா்கள் அக்கறை காட்டுவதில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உள்ளது. சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி, எத்தனை இடங்களில் பாஜக போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் தேசியத் தலைமை முடிவெடுக்கும். முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், நடிகைகள் குஷ்பு, விஜயசாந்தி, கு.க.செல்வம் எம்.எல்.ஏ. போன்றோா் இணைந்தது தமிழகத்தில் கட்சி மேலும் வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது.

தமிழகத்தில் பாஜகவை வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகிறாா்கள். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலைச் சந்திப்பதற்கு தயாராகி வருகிறோம். அத்தொகுதியில் மத்திய அரசின் வளா்ச்சிப் பணிகளை கருத்தில் கொண்டு இந்த முறை அந்தத் தொகுதி மக்கள் வாக்களிப்பாா்கள் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com