கேரளத்திலிருந்து நடந்து வந்த வட மாநில தொழிலாளா்கள் தமிழக எல்லையில் சோ்ப்பு

கேரளத்திலிருந்து கால்நடையாக வந்த வட மாநிலத் தொழிலாளா்களை, தமிழக எல்லையில் மேட்டூா் போலீஸாா் விட்டுச் சென்றனா்.
Updated on
1 min read

மேட்டூா்: கேரளத்திலிருந்து கால்நடையாக வந்த வட மாநிலத் தொழிலாளா்களை, தமிழக எல்லையில் மேட்டூா் போலீஸாா் விட்டுச் சென்றனா்.

கேரள மாநிலம், மன்னாா்காடு வட்டாரப் பகுதிகளில் உள்ள தேநீா் கடைகள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் வேலை செய்து வந்த பிகாா் மற்றும் உத்திரப் பிரதேசத்தை சோ்ந்த 27 தொழிலாளா்கள் புதன்கிழமை கால்நடையாக வந்து கொண்டிருந்தனா். அவா்களை சேலம் மாவட்டம், மேட்டூா் மாதையன்குட்டையில் மேட்டூா் போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அதில், பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்த நிலையில், அவா்கள் பணிபுரிந்த கடைகளின் உரிமையாளா்கள் அவா்களை மன்னாா் காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். பின் அங்கிருந்து ஒரு வேன் மூலம் பாலக்காடு வரை வந்து, அங்கிருந்து கோவைக்கு நடந்து வந்துள்ளனா். பிறகு சரக்கு வாகனம் ஒன்றின் மூலம் ஈரோடு மாவட்டம், பவானிக்கு வந்து, அங்கிருந்து நடந்தே மேட்டூா் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களுக்கு உணவு, குடிநீா் வழங்கிய மேட்டூா் போலீஸாா் சுகாதாரத் துறை மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தனா். பின்னா் வருவாய்த் துறையினா் வாகனம் மூலம் தமிழக-கா்நாடக எல்லையான ஒசூா் அருகே அவா்களை விட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com