50 நாட்களுக்கு பிறகு, பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதியில், மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது.
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டியில் அமைந்துள்ள காவிரிக்கதவணையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டியையும், ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து, கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்த நிலையில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு இன்று முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், மீண்டும் பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதியில் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது. இ-பாஸ் நடைமுறைக்கு அரசு தளர்வளித்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், விசைப்படகில் மூலமாக அண்டை மாவட்டமான ஈரோடு பகுதிக்கு சென்று வரும் நிலை மீண்டும் உருவாகியுள்ளது.
நோய் தொற்று அச்சம் மற்றும் தொலைதூர போக்குவரத்துக்கான அனுமதியின்மை உள்ளிட்ட காரணங்களால், மிகக் குறைந்த அளவிளான பயணிகளே விசைப்படகு போக்குவரத்தினை தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.