வாழப்பாடி அருகே தனியார் வீட்டுமனை விற்பனை நிலத்தில் சாலை அமைக்க தார் காய்ச்சும்போது பாய்லர் வெடித்து சிதறியதில் கூலித் தொழிலாளி இறந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பஞ்சுகாளிப்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பூபதி (35). இவருக்கு மணிமேகலை (32) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். வாழப்பாடி அருகிலுள்ள முத்தம்பட்டி மைக்ரோ பேருந்து நிறுத்தம் அருகே, சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் வீட்டு மனைகள் அமைத்துள்ளனர்.
இதையும் படிக்க- காவிரி மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை : அமைச்சர் மெய்யநாதன்
இங்கு தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை தார் சாலை போடும் பணி தொடங்கியபோது, தாரை காய்ச்சும் பாய்லர் திடீரென வெடித்தது. இந்த எதிர்பாராத விபத்தில் பூபதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பூபதியின் மனைவி மணிமேகலை வாழப்பாடி போலீஸில் புகார் தெரிவித்தார்.
இவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி கவனக்குறைவாக இருந்து, கூலித் தொழிலாளியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் (44) சேலம் போடிநாயக்கன்பட்டி சேர்ந்த மேற்பார்வையாளர் சதீஷ் (30), வீட்டுமனை நில உரிமையாளர் சஞ்சய் (32) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.