சேலம் மாவட்டம் கொளத்தூர் வார சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 4 என்பதால் இன்று மேட்டூரை அடுத்த கொளத்தூரில் கூடிய வெளிச்சந்தையில் சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கொளத்தூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தீபாவளி செலவினங்களுக்காக தங்களின் வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகள் வரத்து அதிகரித்து இருந்ததாலும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வராத காரணத்தாலும் ஆடுகளில் விலை சரிந்தது. சுமார் 10 கிலோ எடை கொண்ட ஆட்டிற்கு கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.1000-ம் வரை விலை குறைந்திருந்தது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் பெரும்பாலானோர் திரும்ப ஆடுகளை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்றனர். தீபாவளி சந்தையில் ஆடுகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கொளத்தூர் வாரச்சந்தையில் சுமார் ரூ. 50,00,000 வரை ஆட்டு வியாபாரம் நடைபெற்றது.