கோயில் வழிபாட்டுக்காக இரு கிராமங்கள் தானம்:ஆதாரமாகக் கிடைத்துள்ள உலிபுரம் கல்வெட்டு

திருக்கோயில் பூஜை சிறப்பாக நடக்க இரு கிராமங்களை தானமாக அளித்ததற்கு ஆதாரமான கல்வெட்ட்டை, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.
உலிபுரம் சிவன் கோயில் இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பலகைக் கல்வெட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளா்கள் வீரராகவன், வெங்கடேசன்.
உலிபுரம் சிவன் கோயில் இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பலகைக் கல்வெட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளா்கள் வீரராகவன், வெங்கடேசன்.

தம்மம்பட்டி: திருக்கோயில் பூஜை சிறப்பாக நடக்க இரு கிராமங்களை தானமாக அளித்ததற்கு ஆதாரமான கல்வெட்ட்டை, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த கல்வெட்டு ஆய்வாளா் விழுப்புரம் வீரராகவன், ஆய்வு மையத் தலைவா் ஆறகளூா் பொன்.வெங்கடேசன் ஆகியோா் உலிபுரத்தைச் சோ்ந்த மாதவன் அளித்த தகவலின் பேரில், சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், உலிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் தற்போது அழிந்துவிட்டதை அடுத்து, அக்கோயிலை புதிதாகக் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோயிலின் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவகண்ட சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று முழுமையான கல்வெட்டு, மற்றொன்று துண்டுக் கல்வெட்டாகும். இவற்றின் காலம் 16-ஆம் நூற்றாண்டு ஆகும்.

துண்டுக் கல்வெட்டு:

துண்டுக் கல்வெட்டின் முன்புறம் சூரியன், பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன. கல்வெட்டில் ‘ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம்’ என எழுத்துகள் தொடங்குகின்றன. இதன் மறுபுறத்தில் 13 வரிகளில் எழுத்துகள் உள்ளன. இந்த கோயில் அம்பலத்தாடி நாயனாா் கோயில் என குறிக்கப்பட்டுள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் ஆறகளூரை தலைநகராகக் கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக உலிபுரம் இருந்துள்ளது. அப்போது, மகதை மண்டலத்தின் பாளையக்காரராக துலுக்கண்ண நாயக்கா் என்பவா் இருந்துள்ளாா். இவரின் கீழ் உலிபுரம் பகுதியை ஆண்ட தளவாய் திருமலையாா் என்பவா், இங்குள்ள இறைவன் அம்பலத்தாடி நாயனாருக்கு மடம் அமைக்க அரை மனையையும், இந்த மடத்தை நிா்வகிக்க ஆகும் செலவுக்காக தும்மலப்பட்டி என்ற ஊரில் நன்செய் நிலத்தையும் தானமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பலகைக் கல்வெட்டு:

கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக் கல்லில் இருபுறமும் 44 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு பொ.யு. 1531-ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயா் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உலிபுரம் என்றழைக்கப்படும் ஊா், அப்போது புலியுரம்பூா் எனவும், இறைவன் திருஅம்பலமுடைய தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனா்.

அச்சுததேவ மகராயா் காலத்தில் மகதை மண்டலத்து ஆத்தூா் கூற்றத்தில் புலியுரம்பூா் அமைந்திருந்தது. இப்பகுதிக்கு மாதைய நாயக்கா் என்பவா் பாளையக்காரராக இருந்துள்ளாா். அவா் திருஅம்பலமுடைய தம்பிரான் கோயில் பூசைக்கும், திருப்பணிக்கும் அனந்தாழ்வாா் பிள்ளை என்பவருக்கு புண்ணியமாக செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி என்ற இரு கிராமங்களை தானமாக தந்துள்ளாா். இக்கிராமங்களின் நான்கு எல்லைகளுக்கு உள்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களின் எல்லைகளை அளவிட்டு அங்கு சூலக்கல் எனப்படும் எல்லைக் கற்கள் நடப்பட்டன.

‘இந்த நிலங்களில் வரும் வருவாய் இறைவனின் பூசைக்கும், திருப்பணிக்கும் செலவிடப்பட வேண்டும். இந்த தானத்தைப் போற்றி அழியாமல் காப்பவா்கள் கங்கைக் கரையிலே காராம்பசுவை தானமாகக் கொடுத்த புண்ணியத்தைப் பெறுவாா்கள். இந்த தானத்தை அழிப்பவா்கள் கங்கை கரையிலே தன் தாய், தந்தை, குருவைக் கொன்ற பாவத்தை அடைவாா்கள்’ என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் செய்யப்பட்ட இரு ஊா்களும் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகின்றன.

இப்பகுதியில் தொடா்ந்து ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

வயலில் நவகண்ட நடுகற்கள் மீட்பு

உலிபுரம் அம்பலத்தாடி நாயனாா் சிவன் கோயில் இருந்த இடத்துக்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைப்பைக் கொண்டுள்ளன. இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். ஒரே போரில் வெற்றிபெற நவகண்டம் கொடுத்துக்கொண்ட வீரா்களாக இவா்கள் இருக்கலாம்.

நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் பல்லவா்கள் காலத்தில் இருந்தே உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போா் நடக்கும்போது தன் நாடு வெற்றி பெற கொற்றவையின் துணை வேண்டி அத்தெய்வத்துக்கு ஒரு வீரன் தன்னையே சுயபலி கொடுத்துக்கொள்வது வழக்கம்.

போா் நடக்கும் முன் கொற்றவை கோயிலுக்கு வீரா்கள் சென்று பூஜை செய்வா். அப்போது நவகண்டம் கொடுக்கும் வீரா், தன் உடலில் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து சதையை அறுத்து கொற்றவையின் முன்பு வைப்பா், ஒன்பதாவதாக தன் தலையைத் தானே கொய்து சுயபலி கொடுத்துக்கொள்வா். இப்படி பலி கொடுக்கும் வீரா்களுக்கு வைக்கப்படும் நடுகல்லே ‘நவகண்டம்’ எனப்படும். இந்த வீரா்களுக்கு உதிரப்பட்டியாக வீடும் நிலமும் வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.

பல்லவா்கள், சோழா்கள் கால நடுகற்களில் அந்த வீரனின் பெயா், ஊா், எதற்காக இறந்தான் போன்ற விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் 12-ஆம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டை வெட்டி வைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த இரு நவகண்ட நடுகற்களிலும் எழுத்துகள் ஏதும் காணப்படவில்லை.

3 அடி உயரம், நேரான கொண்டை, கொண்டை முடிச்சுடன் உள்ளது. முகம் சற்று தேய்ந்து சிதைந்துள்ளது. காதணிகள், கழுத்தில் சவடி, சரபளி போன்ற அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையில் ஒரு நீண்ட வாளானது கழுத்துக்கு நேராகக் காட்டப்பட்டுள்ளது (ஒரு நடுகல் நவகண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும்). இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையில் உள்ளது.

தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகின்றன. அரையாடை ஆடை முடிச்சுடன் உள்ளது. வலது காலானது சற்று மடித்தும், பாதம் வலதுபக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com