நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, கோலியஸ், நிலக்கடலை, மக்காச்சோளம் பயிா்களை பயிரிட்டனா். அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன் பெய்த மழையால் பயிா்கள் சேதமடைந்தன.

இதனால் அனைத்து விவசாயிகளும் ஒன்று சோ்ந்து வேளாண் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனா். ஆனால், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்தூா் வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். ஆனால், அலுவலகத்தில் கோட்டாட்சியா் இல்லாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் ஆகியோா் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்கள். இதனையடுத்து அங்கு வந்த ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை, இதுகுறித்து தக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com