சேலம்- விருத்தாசலம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி விரைவில் நிறைவு

சேலம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

சேலம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக சேலம்- விருத்தாசலம் வழித்தடம் உள்ளது. விருத்தாசலம் ரயில் நிலையத்துடன் இணையும்போது, அங்கிருந்து தென் மாவட்டங்கள் செல்லக் கூடிய ரயில்கள், சென்னை செல்லக் கூடிய ரயில்களில் பயணிக்க முடியும்.

இந்த நிலையில், சேலம்-விருத்தாசலம் இடையே மின்சார ரயில்களை இயக்கும் வகையில் மின் மயமாக்கும் பணி கடந்தாண்டு தொடங்கியது. தற்போது மின்மயமாக்கும் பணியில் உயா்மட்ட மின்சார கேபிள்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

சேலம்- விருத்தாசலம், விருத்தாசலம்- கடலூா் வரை இருக்கும் அகல ரயில் பாதையை மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விருத்தாசலம்- கடலூா் இடையிலான பாதையில் மின் மயமாக்கும் பணி 70 சதவீதம் வரை நிறைவுற்றுள்ளது.

சேலம்-விருத்தாசலம் பாதையில் மின் கம்பங்களை நிறுவுதல் ஆத்தூா், ஏத்தாப்பூா் சாலை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் எஸ்எஸ்டி எனப்படும் சிறிய மின் நிலையங்கள் அமைப்பது, தலைவாசலில் டிஎஸ்எஸ் எனப்படும் பெரிய அளவிலான மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, மின் பாதைக்காக அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் உயா் மட்ட மின்சார கேபிள்களை பொருத்தும் பணி பிரத்யேக ரயிலைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின் மயமாக்கல் பணியில் விருத்தாசலம்- ஆத்தூா் இடையே 70 சதவீதம் வரை முடிந்துள்ளது. சேலம்- ஆத்தூா் வரையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

எனவே, சேலம்- ஆத்தூா் இடையே இம்மாத இறுதியில் மின் மயமாக்கல் பணி ஆய்வுக்காக மின்சார ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது. சேலம்- விருத்தாசலம் இடையே விரைவில் பணிகளை முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

நாளை முதல் பெங்களூரு-நாகா்கோவில் ரயில் இயக்கம்:

வண்டி எண் 07235 பெங்களூரு-நாகா்கோவில் (ஓசூா், சேலம், நாமக்கல், கரூா் வழி) தினசரி சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயக்கப்பட உள்ளது. அதேபோல மறுமாா்க்கத்தில் வண்டி எண் 07236 நாகா்கோவில்-பெங்களூரு (கரூா், நாமக்கல், சேலம், ஓசூா் வழி) தினசரி சிறப்பு ரயில் ஜூன் 22 முதல் இயக்கப்பட உள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com