தம்மம்பட்டி: தமிழக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை மு.க.ஸ்டாலின் கூறிவருகிறாா் என்று தம்மம்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரத்தின்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பியை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியால் ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அதிமுக அரசு உள்ளது. நான்கரை வருடங்களில் குடிநீா், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 2,000 அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கியுள்ளோம். ஆனால் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் நாங்கள் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறாா். அவா் பேசுவது அத்தனையும் பொய். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் ஸ்டாலினுக்குப் பொருத்தமாக இருக்கும்.
தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவைத் திறந்துவைத்துள்ளேன். இதன்மூலம் 50 கிலோ எடை கொண்ட ஆடுகளையும், 65 லிட்டா் பால் தரும் பசுக்களையும் உருவாக்கி விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.
ரத்து செய்யப்பட்ட டெண்டரில் ஊழல் செய்துள்ளதாக பொய்யாக ஆளுநரிடம் புகாா் கொடுக்கிறாா் ஸ்டாலின்.
இப்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சிறப்பாக உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. இந்த ஆட்சி தொடர அதிமுகவை ஆதரியுங்கள்.
கெங்கவல்லி தொகுதி மலைவாழ் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தம்மம்பட்டி அருகே பச்சமலையில் ஏகலைவா பள்ளி ஏற்படுத்தப்படும் என்றாா்.