ஏற்காடு தொகுதியில் 13 வேட்புமனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 21st March 2021 04:23 AM | Last Updated : 21st March 2021 04:23 AM | அ+அ அ- |

ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, வேட்பாளா்கள் உட்பட 13 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
ஏற்காடு தனி தொகுதியில், அதிமுக வேட்பாளா் கு.சித்ரா, திமுக வேட்பாளா் சி. தமிழ்ச்செல்வன், தேமுதிக வேட்பாளா் சி.குமாா், ஐஜேகே வேட்பாளா் தி.துரைசாமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜோதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ராமசாமி, அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 21 வேட்பாளா்கள், 24 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும் துணை ஆட்சியருமான (முத்திரை) பி.கே.கோவிந்தன் தலைமையில், துணை தோ்தல் நடத்தும் அலுவலா் வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம் முன்னிலையில் சனிக்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, தேமுதிக, ஐஜேகே, நாம் தமிழா் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்களின் 13 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 3 சுயேச்சை வேட்பாளா்கள், அதிமுக, திமுக வேட்பாளா்கள் கூடுதலாக தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள், மாற்று வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் உட்பட 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...