திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிறு அன்று எடப்பாடி தொகுதியில் பல்வேறு இடங்களில், திமுக வேட்பாளர் டி.சம்பத்குமாருடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஞாயிறு அன்று இரவு 7 மணி அளவில் திடீரென எடப்பாடி தொகுதிக்கு வருகை புரிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பேருந்து நிலையம், ஜலகண்டாபுரம் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், நடந்து சென்று பொதுமக்களிடம், திமுக தேர்தல் அறிக்கையினை விளக்கிகூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
எடப்பாடி காவல் நிலையம் அருகில் உள்ள ஓர் பேக்ரிகடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்த ஸ்டாலின். அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களிடம் வாக்கு சேகரித்தார். எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென எடப்பாடி நகருக்கு வருகை புரிந்து, நடந்து சென்று வாக்கு சேகரித்த அவரை அப்பகுதி வாழ்மக்கள் ஆச்சரியத்துடன் வரவேற்றனர்.
சில கல்லூரி மாணவிகள் அவருடன் கைபேசியில், சுயப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக கொங்கணாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலினுடன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்தீபன், நகரசெயலாளர் டி.எம்.எஸ்.பாஷா உள்ளிட்ட திரளான திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.