தீவட்டிப்பட்டி பகுதியில் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களின் வாகனங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு அமல்படுத்தியுள்ள முழு பொது முடக்கத்தை பின்பற்றாமல் காடையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனா்.
இந்த நிலையில் தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி தலைமையிலான போலீஸாா், தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது எந்த காரணமும் இன்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் 11 வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா். மேலும் தேவையில்லாத இரு சக்கர வாகனங்களில் சுற்றி நோயைப் பரப்பினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா்.