எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளரி வெள்ளி, மொரசபட்டி, சித்தூர், பூலாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதையும் படிக்க- சென்னையில் இன்று எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?
இதனால் எடப்பாடி உழவர் சந்தை, ராஜாஜி பூங்கா காய்கறி மார்க்கெட், நகராட்சி தினசரி அங்காடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் காய்கறிகள் விற்பனை, பால் மற்றும் செய்தித்தாள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிப்பிற்கு உள்ளானது. கால நேரத்தில் பெய்த திடீர் கனமழையால் நகரப் பகுதியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிகளுக்குச் செல்லும் அலுவலர்கள் கனமழையால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். கால நேரத்தில் பெய்த கனமழையால் எடப்பாடி பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளானது.