அயோத்தியாப்பட்டணம் அருகே கட்டடத் தொழிலாளியான மாற்றுத்திறனாளியை மது பாட்டிலால் வயிற்றில் குத்தியும், தலையில் கல்லை போட்டும் கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து காரிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அக்ரஹார நாட்டாமங்கலம் வள்ளுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்த கோடி என்பவரின் மகன் மணிகண்டன்(30). இவர் பிறவியிலே கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி. கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை 8 மணி அளவில், மர்ம நபர்களால் தலையில் கல்லைப் போட்டும், மது பாட்டிலால் வயிற்றில் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், குள்ளம்பட்டி பிரிவு சாலை அருகே கரடு பகுதியில் மாற்றுத்திறனாளி மணிகண்டன் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற விவசாயி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரிப்பட்டி போலீசார், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை கைப்பற்றினர்.
மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துசாமி காரிப்பட்டி செந்தில்குமார் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளியான மணிகண்டன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.