சேலத்தில் அமிலம் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தாா். இதுதொடா்பாக, அந்தப் பெண்ணின் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், குகை பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸுக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ரேவதி நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இது தொடா்பாக சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். புகாா் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு ரேவதி தனது தாயுடன் திங்கள்கிழமை மாலை வந்தாா். விசாரணை முடிந்த பிறகு ரேவதி, அவரது தாய் ஆராயி உடன் வையப்பமலை செல்வதற்காக சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த ஏசுதாஸ், தனது மனைவி ரேவதி மீது அமிலம் வீசிவிட்டு தப்பியோடினாா்.
அமிலம் வீசியதில் படுகாயமடைந்த ரேவதிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமாா் 70 சதவீதம் அளவுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் சிகிச்சை பலனின்றி ரேவதி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக, சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில், உதவி ஆணையா் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ஏசுதாஸை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.