மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
குருவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தால் பாசன தேவை குறையும். ஆகஸ்ட் 31-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 14,000கன அடியாக அதிகரிக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் பாசனத் தேவை குறைந்தது.
இதனையடுத்து இன்று பகல் 2.00 முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,000கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மீண்டும் உயரத் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 68.87அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13,878கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.73 டி.எம்.சியாகும்.