வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டியில், மறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு பள்ளியில் படம் திறந்து பொதுமக்கள் ஒன்றிணைந்து நினைவு தினம் அனுசரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் கு.பாரதி செல்வம் (53). பன்முகத்திறனாளரான இவர், வாழப்பாடி அடுத்த சோம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 ஆண்டுகள் தலைமையாசிரியையாக பணியாற்றினார். பள்ளி மாணவ–மாணவியருக்கு, பாடங்கள் மட்டுமின்றி, நல்லொழுக்கத்தோடு, சிலம்பம், கராத்தே, நடனம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் சாரணர் இயக்க பயிற்சி போன்றவற்றை அளித்தார்.
சாரண இயக்கத்தின் வாயிலாக குடியரசு தலைவர் வழங்கும் தங்க அம்பு விருது பெற்றுக் கொடுத்தார். மாணவ–மாணவியர் மட்டுமின்றி, பெற்றோர்கள், பொதுமக்களிடையேயும் நட்புறவுடன் பழகி மனதில் இடம்பிடித்தார்.
பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவ–மாணவியருக்கு தன்னம்பிக்கை பயிற்சியும், தொலைக்காட்சி மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இவர், கடந்தாண்டு ஏப்.27-ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது மறைவு சோமம்பட்டி கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவரது முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் திரண்ட பொதுமக்கள் மறைந்த தலைமையாசிரியை கு.பாரதி செல்வத்தின் படத்தை திறந்து நினைவஞ்சலி செலுத்தினர். மாணவ–மாணவியர்களும், பெற்றோர்களும், கண்ணீர் மல்க நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சோமம்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் மகேஸ்வரன், துணைத் தலைவர் கதிரேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன், திமுக கிளை செயலாளர் முருகேசன், சின்னபையன், சுகவனேஸ்ரன், பேளூர் உருதுப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம், கவிஞர் பெரியார்மன்னன், மருத்துவர் அனுசுயாதேவி, ஆசிரியை கண்ணகி உள்ளிட்டோர் பொதுமக்களுடன் கலந்து கொண்டனர்.