எடப்பாடியில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தடுக்க முயன்ற பெண்ணின் கையை உடைத்து மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சேலம் மாவட்ட எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பூலாம்பட்டி ரோடு முருகன் நகரில் வசித்து வரும் சுந்தரம் மனைவி சரோஜா(50). இவர் நேற்று இரவு உறவிர்களுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் மேல் ஜன்னல் வழியாக திறந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சரோஜா கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
இதையும் படிக்க- சங்ககிரி அருகே மூன்று சக்கர மினி ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி
விழித்துக்கொண்ட சரோஜா தாலிச்சங்கிலியை கையில் பிடித்து கொண்டு மர்ம நபர்களிடம் கூச்சலிட்டவாறு போராடி உள்ளார். உடனே அருகில் தூங்கிக்கொண்டிருந்த இருவரும் எழுந்து கூச்சலிட்டதால் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் இருவரும் சரோஜாவின் கையை கல்லால் சரமாரியாக தாக்கி விட்டு தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் வந்து பார்த்தபோது சரோஜா ரத்த வெள்ளத்தில் கை உடைந்த நிலையில் துடிதுடித்துள்ளார்.
உடனடியாக எடப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கொள்ளை நடந்த வீட்டின் எதிரே உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவை வைத்து விசாரித்து வருகின்றனர். எடப்பாடி, பூலாம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.