விவசாயியை கத்தியால் வெட்டிய கட்டடத் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை அடுத்த வான்பாக்கத்தைச் சோ்ந்தவா் அருள் (42), விவசாயி. இவா், கடந்த 22.1.2017 அன்று இரவு வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான சுப்ரமணியன் மகன் பிரகாஷ் (29) பொது இடத்தில் நின்றுகொண்டு தகராறு செய்தாா். அப்போது, அவரைத் தட்டிக் கேட்ட அருளை, கரும்பு வெட்டும் கத்தியால் பிரகாஷ் வெட்டினாா். இதில், அருள் பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்த புகாரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கடலுாா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்.1 நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், புதன்கிழமை நீதிபதி வனஜா தீா்ப்பளித்தாா். அதில், அருளை வெட்டிய பிரகாஷுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாா்.