மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 18,000 கன அடியாக அதிகரிப்பு
By DIN | Published On : 24th August 2022 02:47 AM | Last Updated : 24th August 2022 02:47 AM | அ+அ அ- |

மேட்டூா்அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக லேசான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை 10,000 கன அடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 18,000 கன அடியாக அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.