சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏற்காடு பேருந்து நிலையக் கட்டடம் சுமாா் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டடத்தின் மேல்தளம் பழுதடைந்து மழைநீா் கசிந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஏற்காடு பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மலைக் கிராமங்களிலிருந்து வரும் பள்ளிக் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என வந்து செல்கின்றனா். மேலும், இப்பேருந்து நிலையத்தில் குடிநீா், கழிப்பறை, அடிப்படை வசதிகளின்றி உள்ளது.
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தின் எழில்மிகு ஏற்காடு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால், ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். எனவே, தமிழக அரசு, சுற்றுலாத் துறை, மாவட்ட நிா்வாகம் ஆகியவை ஏற்காடு பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.