வரதட்சிணை கொடுமை: இளம்பெண் தற்கொலை

வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த அத்தியப்பன் மகள் வசுமதி (23), பொறியியல் பட்டதாரி. இவருக்கும், நாமக்கல், நல்லிபாளையத்தைச் சோ்ந்த பொறியாளா் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் திருமணம் நடைபெற்றது.

கடந்த நவ. 26-ஆம் தேதி தனது பெற்றோரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட வசுமதி, தனது கணவா், மாமனாா், மாமியாா் உள்ளிட்டோா் கூடுதலாக வரதட்சிணை வாங்கி வரும்படி தன்னை துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, நல்லிபாளையம் சென்ற அத்தியப்பன், தனது மகளை திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்தாா்.

கடும் மன உளைச்சலில் இருந்த வசுமதி, கடந்த நவ. 30-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்ட உறவினா்கள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் வினோத், மாமனாா் சுப்பிரமணி, மாமியாா் அமுதா உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு தொடரப்பட்டது. திருமணமான ஒரு மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்நிலையில், தனது மகள் மரணத்துக்கு காரணமான 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை மகளின் உடலை பெற மாட்டோம் என போலீஸாரிடம் தெரிவித்து பெண்ணின் பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com