ஆடி மாத பிறப்பினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டையில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் சென்று சுவாமிகளை எளிதாக தரிசிக்கும் வகையில் பாதைகளை மறைத்து வளர்ந்திருந்த கருவேலம் மரங்கள், தேவையற்ற களர்செடிகளை அகற்றும் பணியில் சங்ககிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
ஆடிமாதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதையடுத்து பக்தர்கள் அம்மன், முனியப்பன் கோயில்களில் சுவாமிகளை வணங்கி செல்வது வழக்கம். சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு கோட்டை முனியப்பன், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில்களுக்கு ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஆடி அமாவாசையன்றும் பக்தர்கள் அதிகளவில் குடும்பத்துடன் சுவாமிகளை தரிசிக்க செல்வர். இதனையடுத்து அக்கோயில்களுக்கு செல்லும் பாதைகளை தேவையற்ற கருவேலம் மரங்கள், களர் செடிகள் வளர்ந்து மறைத்து பக்தர்கள் மேலே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது அதனையடுத்து சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளைத் தலைவர் கே.சண்முகம் தலைமையில் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் எஸ்.சி.ராமசாமி, நிர்வாகிகள் சீனிவாசன், செந்தில்குமார், சதீஸ்குமார், கார்த்திக், நித்திஷ்குமார், நிஷாந்த் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பாதையை மறைத்து வளர்ந்திருந்த தேவையற்ற கருவேலம் மரங்கள், களர் செடிகளை அகற்றி பாதையை சீரமைத்தனர். பாதைகளை சீரமைத்த சமூக ஆர்வலர்களை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பாராட்டினர்.