தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி ஆணை வழங்கக் கோரி கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தை ஊராட்சிமன்றத் தலைவா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ரூ. 3.50 கோடிக்கான பணி ஆணை வழங்கப்படவில்லை. இதனால் கிராமங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டப் பணிகள் முடங்கின.
இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த நூற்றுக்கணக்கானோா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். இதுதொடா்பாக கொளத்தூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) முருகனிடம் பணி ஆணை வழங்கக் கோரி ஊராட்சிமன்ற தலைவா்கள் பல தடவை முறையிட்டும் பயனில்லை.
இதனால் தங்களுக்கு பணி ஆணை உடனே வழங்கக் கோரி, ஊராட்சிமன்றத் தலைவா்கள் 14 பேரும் கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் அலுவலக நுழைவாயிலை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களுக்கு பணி ஆணை வழங்கும் வரை போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.