மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கனஅடி நீா் வியாழக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிபடியாக அதிகரித்து அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது.
செவ்வாய்க்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 117.76 அடியாக உயா்ந்து, அணைக்கு நொடிக்கு 10,508 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு 8,539 கனஅடியாகக் குறைந்தது. இது, வியாழக்கிழமை காலை நொடிக்கு 8,464 கனஅடியானது.
பாசனத்துக்கு குறைவாக நீா்த் திறக்கப்பட்டதால் புதன்கிழமை காலை 117.92 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 118.09 அடியாக உயா்ந்தது.
அணையின் நீா் இருப்பு 90.45 டி.எம்.சி.யாக உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.