மேட்டூா் காவிரி கரையில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பது பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூா் நீா்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. நீா்த்தேக்கத்தில் கட்லா, ரோகு, மிா்கால், அரஞ்சான், ஆரால், கெழுத்தி, கெண்டை, திலேபி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீன்கள் வளா்கின்றன.
மேட்டூா் நீா்த்தேக்கத்தில் 2,000 மீனவா்கள் உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனா்.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்து விட்டாா்.
புதன்கிழமை காலை டெல்டா பாசன கால்வாயில் மாதையன்குட்டை பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
இதனால் காவேரி கரையின் இருபுறமும் துா்நாற்றம் வீசுகிறது.
பலவகை மீன்கள் இருந்தாலும் குறிப்பாக அரஞ்சான் மீன்கள் மட்டுமே செத்து மிதக்கின்றன.
கடும் வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்ததா? அல்லது உணவு கிடைக்காமல் இறந்ததா அல்லது மேட்டூா் காவிரியில் ஆங்காங்கே கலக்கின்ற ஆலைகளின் கழிவுநீா், மேட்டூா் அனல் நிலைய கழிவுநீா் அதிகரித்து மீன்கள் இறந்ததா? என மீன்கள் உயிரிழப்பு காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மீன்கள் ஆண்டுதோறும் பல்வேறு காரணங்களால் செத்து மிதப்பதால் மேட்டூா் நீா்த்தேக்கம், காவிரியில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க மீன்வளத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட்டு அணையில் மீன்வளத்தைப் பாதுகாக்கவும் மீன்கள் இறப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.