மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனியொருவராக மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மருது சகோதரர்களின் 221 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போராடி உயிர்நீத்த மருது சகோதரர்களின் நினைவு நாள் இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த நிகழ்வு அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க- தீபாவளியன்று பெண் குழந்தைக்கு அப்பாவான யோகி பாபு
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சேலம் வந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தன் வீட்டின் வளாகத்திலே மருது சகோதரர்கள் உருவப் படத்தை அமைத்து அலங்கரித்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தனி ஒரு ஆளாக கட்சி நிர்வாகிகள், பேரைவை உறுப்பினர்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் தனி ஒருவராய் அந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் எட்டு பேரவை உறுப்பினர்கள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.