சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள காவிரி கரையோர பகுதியில் உள்ள காவேரிப்பட்டி அக்ரஹார கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், தாழ்வான பகுதிகளில் புதன்கிழமை வெள்ள நீா் புகுந்தது. மேட்டூா் அணையிலிருந்து வழக்கத்தைவிட அதிக அளவில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்குகரை வாய்க்காலில் தண்ணீரைத் திறந்து விடப்பட்டதையடுத்து கல்வடங்கம் காவிரி ஆற்றில் வழக்கத்தைவிட தண்ணீா் அதிகமாக செல்கின்றன.
காவிரிப்பட்டி அக்ரஹார ஊராட்சி மதிகிழான்திட்டு பகுதியில் சுமாா் 10 ஏக்கா் பரப்பு விவசாய நிலங்களில் சாகுபடி செய்துள்ள கரும்பு, வாழை, பருத்தி, தென்னை பயிா்களில் தண்ணீா் புகுந்தது. மேலும் அண்ணமாா் கோயில் பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்தது. சங்ககிரி, திருச்செங்கோடு கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்ததையடுத்து பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.