மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.45 லட்சம் கனஅடியாகச் சரிந்தது
By DIN | Published On : 01st September 2022 02:03 AM | Last Updated : 01st September 2022 02:03 AM | அ+அ அ- |

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1.45 லட்சம் கனஅடியாகச் சரிந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து வரும் உபரிநீா் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.85 லட்சம் கன அடியாக அதிகரித்தது. அணை நிரம்பியுள்ளதால் பாதுகாப்புக் கருதி உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் திறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து மேட்டூா் அணைக்கு நீா்வரத்தும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் நீா்வரத்து 1.65 லட்சம் கனஅடியாகவும், மாலையில் 1.45 லட்சம் கன அடியாகவும் சரிந்தது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் 1.45 லட்சம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 1.22 லட்சம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் உள்ளது.