டாடா நகர் விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் ஏறிய வடமாநிலத் தொழிலாளர்களால் தகராறு

டாடா நகர் செல்லும் விரைவு ரயிலின் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிய வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலத்தை அடுத்த தின்னப்பட்டி ரயில் நிலையத்தில் கீழே இறக்கிவிடப்பட்டனர்.
டாடா நகர் விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் ஏறிய வடமாநிலத் தொழிலாளர்கள்.
டாடா நகர் விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் ஏறிய வடமாநிலத் தொழிலாளர்கள்.

கேரளத்தில் இருந்து டாடா நகர் செல்லும் விரைவு ரயிலின் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிய வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலத்தை அடுத்த தின்னப்பட்டி ரயில் நிலையத்தில் கீழே இறக்கிவிடப்பட்டு மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகர் செல்லும் டாடா நகர் விரைவு ரயில் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனிடையே கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக பகல் 2.50 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்தது. இதனிடையே சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கருப்பூர்-தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. 

அப்போது முன்பதிவு பெட்டியில் (எஸ்.4) பயணச்சீட்டு இல்லாமலும், முன்பதிவு செய்யாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஏறினர். இதனால் அந்தப் பெட்டியில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களும், பயணச்சீட்டு இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பயணச்சீட்டு பரிசோதகர் தகவலறிந்து சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், சேலம் ரயில் நிலைய போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ரயில் தின்னப்பட்டி ரயில் நிலையத்தில் மாலை 3.07 மணிக்கு நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி கமிஷனர் ரதீஷ் பாபு, ஆய்வாளர் ஸ்மித் மற்றும் சேலம் ரயில் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் தின்னப்பட்டி ரயில் நிலையம் சென்றனர். அப்போது டாடா நகர் விரைவு ரயிலில் குறிப்பிட்ட முன்பதிவு பெட்டியில் ஏறிய பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். சுமார் 90 ஆண் பயணிகளும், 25 பெண் பயணிகளும் என மொத்தம் 115 பேரை இறக்கிவிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர், சேலம் ரயில் நிலைய போலீஸார் அறிவுரை கூறினர். 

இந்த பிரச்னை காரணமாக டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டு சென்றது. இதனிடையே கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com