மேட்டூர் நீர் தேக்கத்தில் மீன்வளத் துறைக்கு சொந்தமான மோட்டார் படகை மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் நீர்த்தேக்கம் 60 சதுரமைல் பரப்பளவு கொண்டது. மேட்டூர் நீர் தேக்கத்தில் கட்லா, ரோகு, கெண்டை, கெழுத்தி உட்பட 20க்கும் மேற்பட்ட பலவகையான மீன்கள் பிடிபடுகின்றன. 2000 மீனவர்கள் உரிமம் பெற்று மேட்டூர் நீர் தேக்கத்தில் மீன் பிடித்து வருகின்றனர். மீன்வளத்தை பாதுகாக்க மீன்வளத்துறையினர் மோட்டார் படகில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பதை தடுக்கவும் மீன்வளத்துறையினரால் ஆண்டுதோறும் நீர் தேக்கப் பகுதியில் விடப்படும் மீன் குஞ்சுகளை சிலர் திருட்டுத்தனமாக கொசுவலைகள் மூலம் பிடித்து மீன்வளத்தை முற்றிலும் அழித்து வருகின்றனர். இதனை தடுக்க படகுகள் மூலம் மீன்வளத் துறையினர் ரோந்து சென்று வருகின்றனர்.
மேச்சேரி அருகே உள்ள கீரைக்காரனூர் பகுதியில் இருந்து அதிக அளவில் கொசுவலைகளை போட்டு மீன்வளத்தை அழிப்பதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து கீரைக்காரனூர் - பங்களா மேடு பரிசல் துறை பகுதியில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று ரோந்துப் பணியை முடித்துவிட்டு படகினை பரிசல் துறை பகுதியில் கட்டி சென்றுள்ளனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் படகிற்கு தீ வைத்து எரித்துள்ளனர். நள்ளிரவில் தீ பரவியதைக் கண்ட அப்பகுதி மக்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். மீன்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு இதுகுறித்து மேச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளனர். எரிக்கப்பட்ட படகின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருட்டுத்தனமாக மீன் பிடிக்கும் நபர்கள் தான் இந்த படகிற்கும் தீ வைத்திருக்க வேண்டும் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.