அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவலை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்தியக் குற்றப்பிரிவு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த பி.மிலானி, தேனி மாவட்ட திமுக முன்னாள் மாணவா் அணி அமைப்பாளா். இவா், சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1-க்கு ஆன்லைன் மூலம் புகாா் மனு ஒன்றை அனுப்பி இருந்தாா்.
அதில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தோ்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் 33 மற்றும் 33 ஏ-இன்படி தனது வேட்பு மனுவின் போது பிரமாணப் பத்திரத்தில் ஆண்டு வருமானம், அசையா சொத்துகள், கடன் விவரங்கள் குறித்து தவறான தகவலைத் தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு குறித்து விசாரித்த சேலம் குற்றவியல் நடுவா் எண் -1 நீதிபதி கலைவாணி, இந்த மனு குறித்த வழக்கை மத்தியக் குற்றப் பிரிவு நோ்மையாக விசாரித்து, போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், அதுகுறித்த அறிக்கையை மே 26-ஆம் தேதிக்கு முன்னா் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
மேலும், வழக்கு விசாரணையின் போது மனுதாரா் ஆஜராகும் போது போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.