சேலம் புதிய பஸ் நிலையத்தில் பள்ளபட்டி காவல் நிலைய முதன்மை காவலர்கள் சுகவனம், லோகநாதன் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முதியவர் ஒருவர் பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு சந்தேகப்படும் படியாக அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.
சந்தேகத்தின் பேரில் அவரை மடக்கி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது ஒரு பண்டல் இருந்தது. சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த முதியவரை பையுடன் அழைத்துக்கொண்டு பள்ளப்பட்டி காவல்நிலையம் வந்தனர்.
அந்த பண்டலை திறந்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் ரூ. 62 லட்சம் இருந்தது. விசாரணையில் அவரது பெயர் பாலகிருஷ்ணன் (59) என்பதும் அவர் ஈரோடு பெருந்துறை மெயின்ரோடு குமலன் குட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் உதவி ஆணையாளர் சரவணகுமரன், ஆய்வாளர் ராணி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் தங்க வியாபாரம் செய்து வருவதாகவும், விற்பனை செய்த தங்கத்திற்கான பணத்தை வசூலித்து செல்வதாகவும் தெரிவித்தார்.
பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் இதுகுறித்து காவல் ஆணையர் நஜ்முல்ஹோதா, துணை காவல் ஆணையர் மாடசாமி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்து பணத்துடன், வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க அவர்கள் உத்தரவிட்டனர்.
இது குறித்து சேலம் வருமான வரித்துறை ஆய்வாளர் ராஜாராம் மற்றும் தங்கபாலன் ஆகியோரிடம் 62,12,120 ரூபாயுடன் பாலகிருஷ்ணனை ஒப்படைத்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட பணத்தின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.