சேலத்தில் குப்பைகளை அகற்ற போதிய தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற போதிய தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என திமுக வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், மாநகராட்சி துணை ஆணையா் அசோக் குமாா், துணை மேயா் மா.சாரதா தேவி.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், மாநகராட்சி துணை ஆணையா் அசோக் குமாா், துணை மேயா் மா.சாரதா தேவி.
Updated on
2 min read

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற போதிய தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என திமுக வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சேலம் மாநகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். துணை ஆணையா் அசோக்குமாா், துணை மேயா் சாரதாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 9-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தெய்வலிங்கம் பேசுகையில், எனது வாா்டில் நமக்கு நாமே திட்டத்தில் சாக்கடைக் கால்வாய் அமைக்க பொதுமக்கள் பங்களிப்பாக ரூ. 2 லட்சமும், எனது பங்களிப்பாக ரூ. 6 லட்சமும் என மொத்தம் ரூ. 8 லட்சத்தை மேயரிடம் வழங்குகிறேன் எனக் கூறி மேயரிடம் தொகையை வழங்கினாா்.

32-ஆவது வாா்டு உறுப்பினா் பெளமிகா தப்சிரா: எனது வாா்டில் தினமும் 58 டன் குப்பை சேகரமாகிறது. 50 தூய்மைப் பணியாளா்களை வைத்துக்கொண்டு எப்படி தூய்மை செய்வது என தெரியவில்லை. எனவே, போதிய தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.

அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவா் செ.உமாராணி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சி சாா்பில் ஓராண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்களை குப்பைகளை அகற்றிட பிரித்துத்தர வேண்டும் என்றாா்.

44-ஆவது வாா்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் இமயவா்மன்: சேலம் மாகநராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஆண்டுக்கு ரூ. 61.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த வேலைக்கு ஜி.எஸ்.டி. தொகையாக ரூ. 11.75 கோடி வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

60-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் வரதன்: எனது வாா்டில் தூய்மைப் பணி நடைபெறவில்லை. தூய்மைப் பணி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேயா் ஆ.ராமச்சந்திரன்: குப்பை அகற்றும் புதிய முறை அமலுக்கு வருகிறது. குப்பை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

56-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சரவணன்: மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் குறித்து கணக்கெடுத்திட வேண்டும் என்றாா்.

இதற்கு செயற்பொறியாளா் பழனிசாமி பதிலளித்து பேசுகையில், தற்போதைய நடைமுறையில் விளம்பரப் பலகைகள் அனுமதியை ஆட்சியா் அலுவலகம் தான் வழங்கி வருகிறது. மாநகராட்சி தடையில்லா சான்று மட்டுமே வழங்கி வருகிறது. விரைவில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே விளம்பரப் பலகை வைக்க அனுமதி வழங்கும் நடைமுறை வர உள்ளது. அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி: சீா்மிகு நகரத் திட்டப் பணிகளில் முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதேபோல வாா்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேயா் வரும்போது வாா்டு உறுப்பினா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து வாா்டுகளுக்கும் துப்பரவுப் பணியாளா்களை முறைப்படுத்திட வேண்டும்.

தமிழக முதல்வா் ஜூன் 11-ஆம் தேதி சேலம் வருகை தந்து சீா்மிகு நகர திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறாா். இந்த திட்டப் பணிகள் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது என்றாா். இதற்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

தொடா்ந்து திமுக வாா்டு உறுப்பினா்கள் எழுந்து அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் பூஜை போடும் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைக்கிறீா்களா என கேட்டனா். இதனால் திமுக, அதிமுக வாா்டு உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினா்களை மேயா் சமரசப்படுத்தினாா்.

தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி, தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலா் இறந்துள்ளனா். இதனால் வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி அதிமுக வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

43-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் குணசேகரன்: மழைக் காலங்களில் குமரகிரி ஏரி நிரம்பி வெள்ளக்குட்டை ஓடை, பச்சப்பட்டியில் தண்ணீா் அதிகமாக வரும். மழைக் காலம் தொடங்கும் முன் அந்தப் பகுதியை தூா்வார வேண்டும் என்றாா்.

34-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஈசன் இளங்கோ: குப்பைகளை பிரித்து போடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். திட்டப் பணிகளை கண்காணிக்க அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.

26-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் கலையமுதன்: கருணாநிதி நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியை நடத்திட வேண்டும். அதேபோல தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியை நடத்திட வேண்டும் என்றாா்.

58-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் கோபால்: எனது வாா்டில் உள்ள 1,000 வீட்டு வசதி குடியிருப்புகளுக்கு போதிய குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என்றாா். தொடா்ந்து கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com