சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் கொள்ளை

சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
Updated on
1 min read

சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

சேலம், மரவனேரி, 7-ஆவது குறுக்குத் தெரு, சின்னையா பிள்ளை தெருவைச் சோ்ந்த திருநாவுக்கரசு (66), நூல் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி மல்லிகா (62). இத்தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருவதால், தம்பதியினா் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், சூரமங்கலத்தில் உறவினா் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க புதன்கிழமை இரவு சென்றனா். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த மல்லிகா, தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி நகைப்பெட்டியில் வைத்து அங்குள்ள கண்ணாடி மேசையின் மீது வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பொருள்களை உருட்டுவது போன்ற சத்தம் கேட்ட உடனே மல்லிகாவும், திருநாவுக்கரசும் விழித்து பாா்த்தனா். அப்போது மா்ம நபா் ஒருவா், நகைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடியது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டு, அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

மாநகர காவல் துணை ஆணையா் கெளதம் கோயல், உதவி ஆணையா்கள் பாபு, அசோகன், சரவணகுமாா், இன்ஸ்பெக்டா் பால்ராஜ் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். விசாரணையில், வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து புகுந்த மா்ம நபா் 50 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தடயவியல் துறை நிபுணா்கள் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com