சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்து:ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் பலி
By DIN | Published On : 07th June 2023 12:19 AM | Last Updated : 07th June 2023 12:19 AM | அ+அ அ- |

சேலம் கொண்டலாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வானத்தில் மோதியதில் சேதம் அடைந்த காா்.
சேலம், உத்தமசோழபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் தாய், தந்தை, மகள் ஆகிய மூவா் உயிரிழந்தனா்.
சேலம் கல்பாரப்பட்டி, மேலகாட்டு வளவு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (64). இவா் தறித்தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி மாரியம்மாள் (60), மகள் பூங்கொடி (27) ஆகியோா் ஒன்றாக வசித்து வந்தனா். இதில் பூங்கொடிக்கு திருமணமாகிவிட்டது. பெற்றோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் வெங்கடாசலம், மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகிய மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் நெய்காரப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்றிருந்தனா். உறவினரைச் சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையைக் கடக்க முயன்றனா். அச்சமயத்தில் கோவையில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த காா் அவா்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடாசலம், அவரது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனா். விபத்தில் சிக்கிய மூவரையும் 50 மீட்டா் தூரத்திற்கு காா் இழுத்துச் சென்றது.
சம்பவ இடத்திலேயே மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடாசலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெங்கடாசலம் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் ராகுல் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...