1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
By DIN | Published On : 15th June 2023 12:23 AM | Last Updated : 15th June 2023 12:23 AM | அ+அ அ- |

கோடை விடுமுறைக்குப் பிறகு சேலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இதையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் புதன்கிழமை காலை வகுப்புகள் தொடங்கின. நீண்ட விடுமுறைக்குப் பின்பு பள்ளிக்கு வந்த குழந்தைகள் சிலா் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்து அழுதனா். பெற்றோா், குழந்தைகளை சமரசம் செய்து பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால் நான்கு சாலை, சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, திருவாக்கவுண்டனூா் சாலை, ராமகிருஷ்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சீா்படுத்த போதிய அளவு போக்குவரத்து போலீஸாா் இல்லாத நிலையில் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.