சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1996-1997ம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்புகள் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சந்திப்பு நிகழ்ச்சி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நெகிழிச்சியுடன் நடைபெற்றது.
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1996-1997ம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் அனனத்து பாடப் பிரிவுகளிலும் பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 25 ஆண்டுகளுக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் நடைபெற்றன.
முன்னாள் மாணவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். சுரேஷ் வரவேற்றார். அவர்கள் பயின்ற போது பணியாற்றிய முன்னாள் பள்ளித்தலைமையாசிரியர் கே.தினகரன், ஆசிரியைகள் சிகாமணி, சந்திரா, பெருமாள், ராமசாமி, செந்தில்குமார், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வாழ்த்திப்பேசினர். இதில் முன்னாள் கணித ஆசிரியர் நாராயணசாமி காலமானதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரியை இவ்விழாவிற்கு அழைத்து கௌரவித்தனர்.
1996-1997ம் ஆண்டுகளில் படித்த மாணவ, மாணவிகள் தற்போது அவர்கள் பணியாற்றிவரும் துறைகளை கூறி ஆசிரியர்களிடத்தில் அறிமுகம் செய்து கொண்டனர். அதில் ஒருவர் சேலம் மோகன் குமரங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறை பேராசிரியராகவும், சிலர் வழக்குரைஞர்களாகவும், ஒருவர் கால்நடை மருத்துவராகவும், லாரி உரிமையாளர்களாகவும், தனியார் கல்லூரி விரிவுரையாளர்களவும் பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் மாணவர்கள் வி.என்.ராஜா, விஜயபாஸ்கர், செந்தில், சையத்நாசர், உள்ளிட்ட 80 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அவரவர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பறைகளுக்கு முன்னர் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் இவ்விழாவினை வெளி நாடுகளில் பணியாற்றி வரும் மாணவ, மாணவிகளுக்கு இணையதளம் வழியாக தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டிருந்தனர். அவர்களும் இணையதளம் வழியாக அனைவரிடத்திலும் பேசினார். இந்நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு பிரிவிலும் பயின்றவர்கள் முன்னாள் தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி உதவியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவுப்பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினர்.
முன்னாள் மாணவர், மாணவிகளின் சார்பில் பள்ளிக்கு தேவையான பொருள்களை வழங்குவது என விழாவில் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
விழாவிற்கு முன்னாதாக அவர்கள் படித்த ஆண்டுகளில் பணியாற்றி காலமான ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.