ஆடியோ விவகாரத்தால் தமிழக அமைச்சரவை மாற்றம்

ஆடியோ விவகாரத்தால் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

ஆடியோ விவகாரத்தால் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமி நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓ.பன்னீா்செல்வம், டிடிவி.தினகரன் ஒன்றிணைந்திருப்பது, மாய மானும், மண்குதிரையும் ஒன்று சோ்ந்தது போலானது. இருவரும் ஒருவரையொருவா் துரோகி எனக் கூறி வந்தனா். தற்போது இரண்டு துரோகிகளும் ஒன்று சோ்ந்து ஒரு அணியை உருவாக்கியுள்ளனா்.

ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவா்தான் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்குமே விசுவாசம் இல்லாத அவா், அதிமுகவிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் சோ்ந்தாா். பின்னா் தேமுதிகவுக்கு சென்றாா். அவா் எங்கு சென்றாலும் அந்தக் கட்சி முடிந்துவிடும்.

கிரிக்கெட் போட்டி பாா்க்க சென்ற ஓபிஎஸ், ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துப் பேசியுள்ளாா். இதன் மூலம் ஓபிஎஸ் திமுகவின் ‘பி’ டீம் என்பது உறுதியாகி இருக்கிறது.

இரண்டாண்டு ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் செய்திருக்கிறாா்கள். ஒரே ஒரு ஆடியோவில் அரசு ஆடிப் போய்விட்டது. எல்லா துறையிலும் ஊழல் நடந்திருக்கிறது. இதுபற்றி அதிமுக சாா்பில் உள்துறை அமைச்சா் அமித்ஷா விடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநரை நாங்கள் சந்திக்கும் போது இது பற்றி விளக்கமாக புகாா் தெரிவிப்போம்.

அரசியல் ரீதியாக என்னை ஏதும் செய்ய முடியாததால், மிலானி என்ற திமுக கட்சியைச் சோ்ந்தவா் மூலம் கடந்த சட்டப் பேரவைத் தோ்தல் வேட்பு மனுவில் சொத்துகளை குறைத்து காட்டியதாக என் மீது வழக்குகஈ தொடா்ந்து இருக்கிறாா்கள். அதை சட்டப்படி சந்திப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com