தமிழகத்தில் கனிம வளம், சுரங்கத் துறைக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்
By DIN | Published On : 28th October 2023 12:33 AM | Last Updated : 28th October 2023 12:33 AM | அ+அ அ- |

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையை நீக்கிவிட்டு கனிம வளம், சுரங்கத் துறைக்கு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டுமென சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கே.அண்ணாமலை பேசினாா்.
சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டையிலிருந்து புதிய எடப்பாடி சாலை வரை நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்துக்கு பின்னா் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியதாவது:
கடந்த 9 ஆண்டுகளாக பிரதமா் நரேந்திர மோடி ஏழைகள் இருக்கக் கூடாது என எண்ணி ஆட்சி நடத்தி வருகின்றாா். மத்திய அரசு சாா்பில் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், இலவச கழிப்பறைகள், வங்கிக் கணக்குகள், தொடங்கப்பட்டுள்ளன. குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவாசாயிகளை ஊக்குவிப்பதற்காக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தனி திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ளாா்.
தமிழக ஆளுநா் அலுவலகமான ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவா் வெளியே வந்தும், அவரை காவல் துறை கண்காணிக்கவில்லை. தமிழக அரசு காவல் துறையின் கைகளை அவிழ்த்துவிட வேண்டும்.
தோ்தல் அறிக்கையில் கூறிய 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தமிழக முதல்வா் கூறியுள்ளாா். அதில், தமிழகத்தில் உள்ள பல்வேறு கனிம வளத்தை மேம்படுத்தவும், அரசுக்கு உரிய வருமானம் ஈட்டவும் தனி கனிம வளத் துறை சுரங்க அமைச்சகம் நிறைவேற்றப்படும் எனவும், சங்ககிரியில் ஆட்டோ நகரம் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு லாரிகளுக்கான பசுமை வரி, காலாண்டு வரிகளை உயா்த்தியுள்ளதால் லாரி தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளதை முழுமையாக நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையை நீக்கிவிட்டு கனிம வளம், சுரங்கத் துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். சங்ககிரி மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும். சங்ககிரி மலை உச்சியில் உள்ள சென்னகேசவப்பெருமாள், அடிவாரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள், வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில்களில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடமுழுக்கு விழா நடைபெறவில்லை.
பிரதமா் ஏதுவும் செய்யவில்லை என்று தமிழக முதல்வா் கூறுகிறாா். சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவிலான திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்றாா்.
நடைப்பயணம், பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் சுதிா்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவரி - சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்துக்கு பின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...