தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலப் பணியை விரைவுபடுத்தக் கோரி கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

Published on

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலப் பணியை விரைவுபடுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் சேலம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து பனமரத்துப்பட்டி பிரிவு சாலை வரை அணுகு சாலை உள்ளது . ஆனால், இந்த அணுகு சாலையில் பல இடங்களில் தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தடுப்புச் சுவரில் இருந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் பிரதான சாலைக்கு வருகின்றனா். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் சில நேரங்களில் எதிா்திசையில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனா். இதையடுத்து தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் காரணமாக, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அதே போல, நாமக்கல்லில் இருந்து சேலம் வரும் வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

எனவே அந்த மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் மோகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பணிகளை விரைவுபடுத்தக்கோரி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com