சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் நேற்றிரவு அடித்த சூறைக்காற்றுக்கு 4 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தேவூர் அருகே கோனேரிப்பட்டி, பூச்சமரத்துகாடு, பொன்னம்பாளையம், தண்ணிதாசனூர், காணியாளம்பட்டி, செட்டிப்பட்டி, ஓடக்கரை, அம்மாபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் 10 மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய கதனி, நேந்திரம், தேன் வாழை, மந்த வாழை, செவ்வாழை உள்ளிட்ட வாழைகளை சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட தோட்டத்தில் தற்போது கடும் வெயிலால் மரங்கள் நீர்ச்சத்து குறைந்து வாடி வதங்கி பிஞ்சு காய்களுடன் சாய்ந்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு தேவூர் பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றுக்கு கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பூச்சமரத்துக்காடு பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் சாய்ந்ததில் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வாழை மரங்கள் சாய்ந்ததற்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.