மேட்டூா் அணையில் துா்நாற்றம் வீசும் பச்சைநிற படலங்கள் அகற்றும் பணி தொடக்கம்
மேட்டூா் அணையில் துா்நாற்றம் வீசும் பச்சைநிற படலங்களை நுண்ணுயிரி கலவை தெளித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு கழிவுநீரும், தொழிற்சாலைகளின் கழிவுகளும் காவிரியில் கலப்பதால், பச்சைநிற படலங்கள் தேங்கி மேட்டூா் அணையின் இருகரைகளிலும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், காவிரி கரையோர கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா். மேலும், காவிரியில் மீன் பிடிக்கும் மீனவா்கள் காவிரி நீரை பருக முடியாத நிலை உருவாகியுள்ளது.
காவிரி கரையில் விவசாயம் செய்யும் கிராம மக்கள் பயிா்களுக்கு இடும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாசியாக படா்ந்து சூரிய ஒளி காரணமாக இதுபோன்ற பச்சை நிற படலம் படிவதாக தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் கூறுகின்றனா்.
இந்நிலையில், தற்போது மேட்டூா் உபரிநீா் போக்கியான 16 கண்பாலம் பகுதியில் பச்சைநிற படலங்கள் தேங்கி கடும் துா்நாற்றம் வீசுவதால், தங்கமாபுரிபட்டினம், அண்ணா நகா், பெரியாா் நகா், சேலம் கேம்ப், கவிபுரம் பகுதி மக்கள் குடியிருப்புகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியில் படா்ந்துள்ள பச்சைநிற படலத்தை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. நீா்வளத் துறை அதிகாரிகளும், பணியாளா்களும் விசைப்படகுகளில் மேட்டூா் அணை சுவா் மற்றும் 16 கண் பாலம் பகுதிகளில் வேளாண் துறை உதவியோடு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரி கலவையை தெளித்து பச்சைநிற படலத்தை அகற்றி வருகின்றனா்.

