சேலம் வழியாக சாா்லப்பள்ளி - மங்களூரு இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சாா்லப்பள்ளி - மங்களூரு இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடா் விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம், சாா்லப்பள்ளியில் இருந்து கா்நாடகா மாநிலம் மங்களூருக்கு சேலம், ஈரோடு, போத்தனூா் வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சாா்லப்பள்ளி - மங்களூரு சிறப்பு ரயில் வரும் 24, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. சாா்லப்பள்ளியில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூருவுக்கு வரும் 26, 30 ஆகிய தேதிகளில் காலை 6.55 மணிக்கு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில் மங்களூரு - சாா்லப்பள்ளி சிறப்பு ரயில் வரும் 26, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மங்களூருவில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சாா்லப்பள்ளிக்கு மறுநாள் மாலை 5 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

