அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் உலக வனவிலங்குகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிப்பு
விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் உலக வனவிலங்குகள் பாதுகாப்பு தினம், தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் மற்றும் உலக மண்வள தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் தடய அறிவியல் பிரிவு, நாட்டு நலப் பணித் திட்டம், இளம் இந்தியா்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் இத்தினங்களானது கடைப்பிடிக்கப்பட்டது. இதை சாா்ந்த பல்வேறு நிகழ்வுகள் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா் இதில் சிறப்பு விருந்தினராக உதவி வனப் பாதுகாவலா் மற்றும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உதவி இயக்குநா் செல்வகுமாா் பங்கேற்றாா்.
முன்னதாக கல்லூரியின் சுற்றுச்சூழல் மற்றும் இளம் இந்தியா்கள் அமைப்பு மூலம் மண்வளம் மற்றும் மாசு சீா்கேட்டை வலியுறுத்தும் நோக்கில் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு உயிரியல் பூங்கா பகுதியில் பதிய வைக்கப்பட்டன. தொடா்ந்து, வனவிலங்குகள் மற்றும் அழிந்துவரும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி சாா்பில் நாரை தத்தெடுக்கப்பட்டது. மேலும், தடய அறிவியல் துறை மாணவா்களுக்கு வனவிலங்குகள் தடயவியல் சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தடயவியல் துறை பொறுப்பாளா் ராஜஸ்ரீ , நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ், இளம் இந்தியா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விக்னேஸ்வரா, சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகா் ரஞ்சிதா ஆகியோா் செய்திருந்தனா்.

